50 ஆண்டுகளுக்கு முன் அம்மாப்பேட்டை பகுதியில் பிரியாணிகடை கிடையாது..! பிரியாணி வாங்க செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பாம்பேபிரியாணிகடை, அம்பிகா ஹோட்டல்,நியூ ரெஸ்டாரண்ட் ஆகிய கடைகளுக்கு செல்லவேண்டும்…!
அக்குறையை தீர்க்க அன்புசகோதர்கள் திரு.N.N.ராமச்சாரி திரு.N.N.கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் அம்மாப்பேட்டை மெயின் ரோடு,சிங்கமெத்தை அருகே 1965 ஆம் ஆண்டு ஆரம்பித்ததுதான் N.N.R பிரியாணி ஹோட்டல்..!அதன் பின் சில ஆண்டுகள் கழித்து அன்பு நண்பர் திரு.N.N.கிருஷ்ணமாச்சாரி அவர்கள் ஆரம்பித்தது N.N.K பிரியாணி ஹோட்டல்..!
அனைத்து சேலம் மக்களையும் ஈர்க்க இவர்கள் அறிமுகப்படுத்திய சூப்பர் வெரைட்டி தான் “எசன்ஸ் தோசை..!”
பொட்டுக்கடலை,தேங்காய்,மிளகு,சோம்பு,கசகசா உள்ளிட்ட கறிமசால் அயிட்டங்களை கொண்டு அவர்கள் மட்டுமே அறிந்த கைப்பக்குவத்தில் தயாரிக்கப்பட்ட கமகம மணம் கமழும் கெட்டி எசன்ஸ்-ஐ சிறு தோசையின் நடுவே வைத்து சுடசுட பரிமாறப்படும் எசன்ஸ் தோசைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்னையும் சேர்த்து..!
சிறிது வாயில் போட்டவுடன்,மீதி தோசை எப்படி உள்ளே சென்றது என்றே தெரியாத அளவுக்கு நாக்கில் நீர் ஊறும் சுவை கொண்டது எசன்ஸ் தோசை..! வெளியூர்களில் வெளிநாடுகளில் பணிபுரியும் சேலம் மக்கள் சேலம் வரும்போது முதலில் வாங்கி உண்பது எசன்ஸ் தோசை தான்..!
திரு.N.N.கிருஷ்ணமாச்சாரி அவர்கள் கடின உழைப்பாளி,இன்முகத்துக்கு சொந்தக்காரர்,கடையில் கூட்டம் இருக்கும் போது தானே இறங்கி அனைத்து பணிகளையும் பார்ப்பார்..! சேலம் அருள்மிகு கோட்டை பெரியமாரியம்மன் தீவிர பக்தர். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு வருவார்..!வரும்போது அம்மனுக்கு அபிசேகம் செய்ய இளநீர்,பால் தவறாமல் வாங்கி வருவார்..! என்னை பார்த்தவுடன் என்ன எழில்? எப்பிடிப்பா இருக்க? என அன்புடன் நலம் விசாரிப்பார்..! மனம் விட்டு பேசுவார்..!
அவரை மனமார பாராட்டுவதுடன் {1965-2015} பொன்விழா காணும் எசன்ஸ் தோசை யை அறிமுகப்படுத்திய N.N.R, N.N.K சகோதர்களுக்கு எசன்ஸ் தோசை பிரியர்கள் சார்பாக நல்வாழ்த்துக்கள்..!
மதியம் இரண்டு மணி முதல் இரவு ஒன்பது வரை எசன்ஸ் தோசை சுடச்சுட கிடைக்கும்..!
photo & news courtesy: Esan D Ezhil Vizhiyan