மொழி புரியாத கலாச்சாரம் தெரியாத ஊரில், நம் இந்தியத்துணைக்கண்டத்தை சேர்ந்தவரை பார்க்கும் பொழுது ஒரு விதமான நட்புணர்வு ஏற்படும். நம்மை அறியாமல் நம் உதடுகள் அவரை பார்த்துப் புன்னகைக்கும். அதுவே நம் பகுதியை சேர்ந்தவரை, நாம் பேசும் மொழி பேசுபவரை பார்த்தால்? இங்கு நடந்ததும் ஏறத்தாழ அது போன்ற ஒன்று தான்.
ஐரோப்பா கண்டத்தில் இருக்கும் சௌராஷ்டிரா மொழி பேசும் மக்கள் 53 பேர் get2gether எனப்படும் ஒருங்கிணைப்பு விழா திலிப், பாலாஜி, சரவணன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரின் முயற்சியால் விமரிசையாக நடைபெற்றது. ஜெர்மனி, லக்ஹ்சம்பெர்க், சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து ஜெர்மனியின் Frankfurt நகருக்கு வருகை புரிந்தனர்.
Frankfurt-ல் இருக்கும் இவர்களின் முன்று குடும்பங்கள் இந்த விழாவிற்கு முக்கிய காரணிகளாகவும் அவர்களின் உத்வேகம் அதற்கு வினையூக்கியாகவும் இருந்தது என்றால் அது மிகையாகாது. அனைவருக்கும் தங்கும் இடம், உணவு மற்றும் இதர வசதிகள் அனைத்தும் சிறப்பாக அமைக்கபட்டிருந்தது.
இவ்விழாவானது ” ஏப்ரல் 18ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 20ஆம் தேதி ” வரை Frankfurt நகரின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. 17ஆம் தேதி முதல் ஒவ்வொரு குடும்பமாக வரத்துவங்கி, 18ஆம் தேதி அனைவரும் வந்தடைந்தனர்.
18 ஏப்ரல் 2014 ஆம் தேதி அன்று நாகபூஷணி அம்மன் கோவிலில் நடைபெற்ற பூஜையுடன் துவங்கிய விழா.
19 ஏப்ரல் 2014 ஆம் தேதி Lochmühle பூங்காவில் வேகம் பிடித்தது. சௌராஷ்டிரா உணவுகளை (ரொட்டி ஹல்வா, அம்பட் பாத், தக்காளி பொங்கல், இட்ல, தக்காளி அவுன்டி, தயிர் சாதம், அல்லா சட்னி, மற்றும் பல) பகிர்ந்துண்டு, சிறு சிறு விளையாட்டுக்கள் மூலம் வெற்றிகரமாக நடந்தது.
20 ஏப்ரல் 2014 ஆம் தேதி Frankfurt Nied Saalbau அரங்கத்தில், அனைத்து குடும்பங்களும் பாரம்பரிய உடைகளில் தங்களை முறையாக அறிமுகபடுத்தி கொண்டு அளவளாவி மகிழ்ந்தனர். இந்த முயற்சி குடும்பஸ்தர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஒரு சிற்றுலாவாக(சிறிய சுற்றுலா) அமைந்ததென்றால், Bachelor Boys-க்கு புதிய நண்பர்களை கண்டுகொள்ளவும் , வீட்டுச் சாப்பாடை ருசிக்கும் வாய்ப்பாகவும் அமைந்தது.
இது போன்ற get2gether-கள் மீண்டும் மீண்டும் நடை பெற வேண்டும். “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” எனும் முதுமொழியை மெய்ப்பிக்க வேண்டும்.- Write up by Arun Bathey